மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் சித்தர் மாயாண்டி சுவாமிகள் 164 வது அவதார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்டிக்குளம் கிராமத்திலுள்ள மாயாண்டி சுவாமிகளின் கருப்பனேந்தல் மடத்தில் தவச்சாலையில் நடைபெற்ற அவதார விழாவை முன்னிட்டு குலாலர் சமுதாய சிவாச்சாரியார்களால் புனித நீர் கலசங்கள் வைத்து யாக வேள்வி நடத்தப்பட்டது. அதன்பின் பூர்ணாஹூதி நடந்து தீபாராதனை காட்டப்பட்டதும் மாயாண்டி சுவாமிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்பின் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. மடத்தில் உள்ள பிற பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திரளான பக்தர்கள் கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்துக்கு வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாயாண்டி சுவாமியை தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.