திருப்பூர்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழமைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்தே அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவித்து வந்த நிலையில்,தொடர்ந்து பெய்து வந்த மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. கோவை பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து உடுமலையில் உள்ள அமராவதி அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரோயோரப் பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு உள்வரத்தாக 5 ஆயிரம் கனஅடி நீர் உள்வரத்தாக வந்து கொண்டிருக்கும் நிலையில், 90 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 86 அடியாக உயர்ந்தது. இதனால் அமராவதி அணை விரைவில் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மேட்டுப்பாளம் பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.