செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வந்த பந்தய மோட்டார் சைக்கிள்கள், கார்கள் வேகம் கணக்கிடும் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு அந்த வாகனங்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அபராதம் விதித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை சோதனை சாவடியில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா(செங்கல்பட்டு), முரளி(திருக்கழுக்குன்றம்), ஆனந்தன்(மதுராந்தகம்) மற்றும் மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி, மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் சட்டம்-ஒழுங்கு போக்குவரத்து போலீசார் இணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில் வேகம் கணக்கிடும் கருவி மூலம் அதிவேகத்தில் வரும் வாகனங்களை கண்காணித்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் வந்த வாகனங்கள் வேகம் கணக்கிடும் கருவி மூலம் சிக்கின. இதில் விபத்தினை ஏற்படுத்தும் வகையில் அதிவேகத்தில் முகப்பு விளக்கு இல்லாமல் அதிக ஒலி எழுப்பி எந்த பந்தய மோட்டார் சைக்கிள்கள்(ரேஸ் பைக்குகள்) மற்றும் கார்கள் என 50 வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்களும், போக்குவரத்து போலீசாரும் மடக்கிப் பிடித்து வழக்குப்பதிவு செய்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களில் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விபத்தினை குறைக்கும் வகையில் குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, முகப்பு விளக்கு இல்லாமல் வரக்கூடாது, அதிக ஒலி எழுப்பி வாகனங்களை ஓட்டி வரக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பினர்.