2-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
பின்னர் தில்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். அதனையடுத்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டாவது முறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம், சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.