பெரியபாளையத்தில் அரசு கட்டிடத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை வழக்கம் போல கட்டுமான பணிகள் நடைபெற்றது.
சித்தாள் பணியில் ஈடுபட்டிருந்த குமாரி என்ற பெண் சிமெண்ட் கலவையை எடுத்து சென்ற போது கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.