தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத்துறையின் 3 பொறியாளர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி – ஒட்டாணம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பொதுப்பணித் துறை அமைச்சருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் பொதுப்பணித்துறை அமைச்சர் அச்சாலையை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், சாலை பணிகளை ஆய்வு செய்ய தரக்கட்டுபாடு குழுவினருடன் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர் கீதா சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி – ஒட்டாணம் இடையே அமைக்கப்பட்ட சாலைப் பணிகளை நேரில் ஆய்வும் முறையான விசாரணையும் மேற்கொண்டார்.
அந்த ஆய்வில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு உள்ளது உறுதி செய்யப்பட்டது. தரமற்ற சாலைகள் அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மருதுபாண்டி மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் நவநீதி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செந்தில் உத்திரவிட்டுள்ளார்கள்.
மேலும், சாலை பணி ஒப்பயததாரர் தர்ஷன் அன்ட் கோ-வின் ஒப்பந்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.