முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் திருக்குவளைக்குச் சென்றுள்ளார்.
நேற்று திருவாரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
அஞ்சுகத்தம்மையார் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
இதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர், மருத்துவமனை வளாகத்தில் பச்சிளங் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனிக் கட்டடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளைக்குச் சென்றார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதல்முறையாக கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்திற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வருகை புரிந்தார். முன்னதாக முதல்வருக்கு நாகை மாவட்ட எல்லையான கொளப்பாடு பகுதியில் நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என்.கௌதமன் தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து திருக்குவளை வருகை புரிந்த மு.க.ஸ்டாலின் அங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தனது குடும்பத்தோடு தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஆலயத்திலிருந்து நடந்தே தனது தந்தையான கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு வருகைதந்த முதல்வர், அங்கு இருந்த அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலிமாறன், கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்: முதல்வர் திறப்பு
அதனைத் தொடர்ந்து கலைஞர் பிறந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள பழமையான புகைப்படத் தொகுப்புகளை பார்வையிட்டார். பின்னர் தனியார் திருமண அரங்கில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட முதல்வர், திருக்குவளையில் இருந்து புறப்பட்டார்.
பின்னர் நாகை மாவட்டம் சீராவட்டம் பகுதியில் வெண்ணாற்றில் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் 3.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
முதல்வரின் வருகையையொட்டி திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில், 3 ஏடிஎஸ்பிக்கள், 8 டிஎஸ்பிக்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 70 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 700 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஆகியோரும், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழக தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆளூர்.ஷாநவாஸ், நாகை மாலி, ஆகியோர் பங்கேற்றனர்.
முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் உடனிருந்தனர்.