மேக்கேதாட்டு அணையை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எதிர்க்கும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டு பகுதியில் கட்டாயம் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துரைமுருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.
படிக்க: மேக்கேதாட்டு அணையை உறுதியாக கட்டுவோம்: எடியூரப்பா
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
எடியூரப்பா:
மேக்கேதாட்டு அணைத் திட்ட விவகாரத்தில் எல்லா அம்சங்களும் கா்நாடகத்திற்கு சாதகமாக இருக்கின்றன. எந்தக் காரணத்திற்காகவும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறுத்த மாட்டோம். சட்டவரம்புக்கு உள்பட்டு மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைச் செயல்படுத்தி, முடித்துக் காட்டுவோம். இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
வாட்டாள் நாகராஜ்:
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் நாம் என்ன செய்தாலும், அதற்கு தமிழகம் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. நமது நிலத்தில் ஓடும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. மாநில அரசு மேக்கேதாட்டு அணைத் திட்டப் பணிகளை உடனடியாக தொடங்கவில்லை என்றால், நாங்கள் தீவிரப் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் நேற்று தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.