நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத் தேரோட்டம் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் தைப்பெருந்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை (ஜன.28) நடைபெற்றது. சுரேஷ் ராஜன் எம் எல் ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர் மக்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பிற்பகலில் நிலையை அடைந்தது. அறங்காவலர் குழு தலைவர் சிவ.குற்றாலம், பாஜக ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளர் ராஜன், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.