மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் தில்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராடி வந்த விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி பேரணியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
இதனை கண்டித்தும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லிபாபு தலைமையில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அறவழியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்று வந்ததாகவும், உலக நாடுகளே பாராட்டும் வகையில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்ததாக தெரிவித்தனர்.
டிராக்டர் பேரணியில் மத்திய அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தீயசக்திகள் ஊடுறுவி போராட்டத்தை திசை திருப்பியதாக புகார் தெரிவித்தனர்.
மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் 1 கோடி விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.