மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான பிரச்னையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெருங்குடி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பிவி(55). இவர் தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் சேர்ந்து அரிவாள்மனை மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் காத்தூன்பீவி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் இருந்தோர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காத்தூன்பீவியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை விசாரித்து வருகின்றனர்.