தில்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் எம்.ரவி தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது:
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து 60 நாள்களுக்கும் மேலாக தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் விவசாயிகளின் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியுள்ளனர்.
ஆகவே, தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.