அவிநாசி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவிநாசியில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லியில் தொடர்ந்து 60 நாள்களுக்கும் மேலாக பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் முகாமிட்டு போராடி வருகின்றனர். மேலும் குடியரசு தினத்தன்று 100 கிலோமீட்டர் டிராக்டர் பேரணி நடத்துவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து அவிநாசியில் அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில், செவ்வாயக்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
முன்னதாக அவிநாசி ஆட்டையாம்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் முத்துசாமி தேசியக் கொடி ஏற்றியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து ஆட்டையம்பாளையத்தில் துவக்கிய இருசக்கர வாகனப் பேரணி பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. நிறைவாக, பேரணியில் பங்கேற்றோர் மூன்று வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு கலைந்து சென்றனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே.எம்.இசாக், காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன், கொமதேக லோகநாதன், மதிமுக சுப்பிரமணி, பாபு, திமுக பழனிசாமி, சிவப்பிரகாஷ், அவிநாசியப்பன் உள்பட அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.