திருச்சி: புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்து திருச்சியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனப் பேரணியை காவல்துறை தடையை மீறி நடத்தின.
மூன்று புதிய வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசியக் கொடியை ஏந்தி செவ்வாய்க்கிழமை டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து இரு சக்கர வாகனங்களில் பேரணி நடத்துவதாக அறிவித்தனர். இதன்படி விவசாயிகள் சங்கத்தினர் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே செவ்வாய்க்கிழமை திரளாகக் கூடினர்.
ஆயிரக்கணக்கானவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பேரணிக்குச் செல்ல ஆயத்தமாகினர். காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வாகனத்துடன் காவலர்கள் கீழே தள்ளினர். ஆனால் காவலர்களின் அடக்குமுறையை மீறி அனைவரும் இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தினர்.
இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.