தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காவல் துறையினர் தடியடி நடத்தியதற்கும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியது:
"தில்லியில் அமைதி வழியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் மீது மோடி அரசும் அமித் ஷா தலைமையிலான காவல் துறையும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசி வருகிறது.
இதன்மூலம், போராடும் விவசாயிகளைக் கலைத்துவிட முடியும் என்று அரசு நம்புகிறது. மோடி அரசின் மக்கள் விரோத போக்கையும், அரச பயங்கரவாத போக்கையும் விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தப் போக்குகளைக் கைவிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைச் சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்" என்றார் அவர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக தில்லி நோக்கி மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்கூட்டியே பேரணி தொடங்கியது. இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் பேரணியை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.