தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பேருந்து பைக் மோதியதில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் சின்னஓவுலாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சத்யன் மகன் ராகுல் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை சொந்த வேலை காரணமாக கம்பம் வழியாக கூடலூர் நோக்கிச் சென்றார்.
அப்போது முன்னால் சென்ற கார் திடீரென்று நின்றது. கார் கதவு திறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் கார் கதவு மீது மோதி நிலைகுலைந்து, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதினார். இதில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் என்.எஸ்.கீதா பிரேதத்தைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத விசாரணைக்கு ஒப்படைத்தார். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் கந்தசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.