சீனா என்ற ஒற்றை வார்த்தையை சொல்லவே பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் தேர்தல் பிரசாரத்தையொட்டி தமிழகம் வருகை தந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி . மூன்றாம் நாளான இன்று கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் மக்கள் மத்தியில் பேசிய அவர்,
நாட்டு மக்கள் அமைதியான மகிழ்ச்சியான முறையில் வாழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
ஆனால், இந்திய பகுதியை பிரதமர் மோடி சீன ராணுவத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். சீன ராணுவம் தற்போது இந்திய எல்லைக்குள் அமர்ந்திருக்கிறது. ஆயிரம் கிலோமீட்டர் தூரம் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
56 இன்ச் அகல மார்பளவு இருப்பதாக கூறிக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி சீனா என்கிற வார்த்தையை சொல்லப் பயப்படுகிறார். சீனாவிடம் பேச தைரியமற்றவராக இருக்கிறார். கடந்த நான்கைந்து மாதங்களாக சீனா என்கிற வார்த்தையை உச்சரித்ததே கிடையாது.
சீன ராணுவம் ஊடுருவிய நேரத்தில், அப்படி யாரும் வரவில்லை என்று பிரதமர் பொய் கூறினார். சில நாள்களுக்கு பிறகு அமைச்சர்களும் ராணுவமும் ஒப்புக்கொண்டார்கள்.
இந்திய பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியதன் காரணமாகவே சீன ராணுவம் தைரியமாக உள்ளே வந்திருக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் சீன ராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது.
பாலக்கோடு தாக்குதல் நடப்பதற்கு 3 நாள்களுக்கு முன்னதாகவே ஒரு ஊடகவியலாளர் தாக்குதல் குறித்து அறிந்திருக்கிறார்.
மேலும் இந்திய விவசாயத்தை அளிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். விவசாயத்தை அவர் மூன்று கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.