திருப்பூர் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட மகனின் சடலத்தை மீட்டுத்தரக்கோரி அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த ஜெ.தாஜ்தீன், அசினா தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:திருப்பூர் பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கம் பின்புறம் உள்ள திருமலை நகர் தெற்கு 2ஆவது வீதியில் வசித்து வருகிறோம். எங்களது மகன் மஹபூப் பாஷா என்கிற அபு(19), இவர் அவிநாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பிஏபி வாய்க்காலில் நண்பர்களுடன் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அபு தண்ணீர் மூழ்கினார். அருகிலிருந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் பலனளிக்காமல் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் பிஏபி வாய்க்காலில் அவரது சடலத்தைத் தேடும் பணியில் காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஒரு நாள் மட்டுமே ஈடுபட்டனர்.
ஆனால் அதன் பிறகு வாய்க்காலில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதாக்கூறி தேடும் பணியை நிறுத்திவிட்டனர். ஆகவே, பிஏபி வாயக்காலில் தண்ணீரை நிறுத்தி எனது மகனின் சடலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.