அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் காதலியுடன் சேர்த்து வைக்கக் கோரி இளைஞர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள வைரவிகுலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ். இவர் திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்து உறவினரிடமும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் அந்தப் பெண் அவரது வீட்டிற்கு வர சம்மதிக்க வில்லையாம். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தாராம். பலமுறை ஆனந்தராஜ் அழைத்தும் வரவில்லையாம்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமைஅதிகாலை 5.30 மணி அளவில் கல்லிடைகுறிச்சி பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள செல்போன் டவரில் ஏறி தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரிக்கை விடுத்து வருகிறார். அந்தப் பெண் வரும் வரை தான் செல்போன் டவரில் இருந்து இறங்கப்போவதில்லை என்றும் கூறி வருகிறார்.
தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் மற்றும் அம்பாசமுத்திரம் தீயணைப்புத்துறையினர் ஆனந்தராஜிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.