மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோவிலில் தை மாதம் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மாரியம்மனை மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது அருள்வாக்கு. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் தை மாதம் முதல் வெள்ளி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருள ஓம்சக்தி கோசத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர் 4 வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தேரின் முன்பு சிவன் பார்வதி உள்ளிட்ட சுவாமிகளின் வேடம் தரித்து வந்தனர். போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.