சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 ஆவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை காலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. சுயநினைவுடன் இருக்கிறார். அவர் உணவை இயல்பாக எடுத்துக்கொள்கிறார். உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடக்கிறார். வழக்கமாக கரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.