திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சர் கே.சி. வீரமணி, பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-ஊத்தங்கரை இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற உள்ளதையடுத்து, அதன் விழாவை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை 45 கிலோ மீட்டர் தூரம் இருவழி தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சாலையை N.179A நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற ரூ.300 கோடி மதிப்பீட்டில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தலைமையில்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் சாலை பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், திருப்பத்தூர் நகரச் செயலாளர் டி.டி.குமார், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், தேசிய நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.