காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இம்மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அத்திவரதர் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
அத்திவரதருக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் 3 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் இம்மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளன்று கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் இருவரும் சிறப்பு அலங்காரத்தில் அத்திவரதர் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் தெப்பக்குளத்திற்கு வந்து தெப்பத்தில் பவனி வருகின்றனர். இதேபோல இம்மாதம் 29, 30 ஆம் தேதிகளிலும் தெப்போற்சவம் அனந்தசரஸ் திருக்குளத்தில் நடைபெறவுள்ளது. நிறைவு நாளான 30 ஆம் தேதி சனிக்கிழமை தெப்போற்சவம் முடிந்து பெருமாளும், தாயாரும் ஸ்ரீஉடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்கின்றனர். பின்னர் திருமழிசையாழ்வார் சாற்றுமுறையை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியுடன் தெப்போற்சவம் நிறைவு பெறுவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.