கடின உழைப்பு என்றுமே வீணாகாது என்றும், ஒற்றைச் சிந்தனையுடன் கடினமாக, உண்மையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி என்று தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு கடந்த வியாழக்கிழமை (ஜன. 21) சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சேலத்தில் இன்று நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியது சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது.
ஆஸ்திரேலியாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு மாதிரி இருந்தது. வெற்றிக் கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கி விட்டேன்.
இந்திய அணியில் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்.
பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை விட நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சியளித்தது.
ஆஸ்திரேலியாவில் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மட்டுமின்றி அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடியதால்தான் வெற்றி கைவசமானது.
தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அடுத்தடுத்து 3 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடத்தது. எந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் கட்டாயம் விளையாடுவேன்.
ஒற்றைச் சிந்தனையுடன் கடினமாகவும் உண்மையாகவும் உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சியாக உள்ளேன்.
கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்பது தான் நான் மற்றவர்களுக்கு சொல்ல விரும்புவது. இந்தியாவுக்காக மேலும் மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது என்று கூறினார்.