கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் குடும்பத்தகராறு காரணமாக ஆலைத் தொழிலாளியை கொலை செய்த மனைவி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை சரணடைந்தார்.
கோவில்பட்டி லாயல் மில் காலனியைச் சேர்ந்தவர் ஆதிலிங்கம் மகன் பிரபு(38). இவருக்கும் இவரது உறவினர் ஆகிய உமா மகேஷ்க்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம். தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பிரபுவுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தம்பதியிடையே பேச்சுவார்த்தை எதுவும் கிடையாதாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த உமா மகேஸ்வரி சனிக்கிழமை அதிகாலை அரிவாளால் பிரபுவை சரமாரியாக வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே வந்தவர் வீட்டிற்கு வெளியே விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து கணவரை கொலை செய்த உமா மகேஷ் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.