இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து 4 தமிழக மீனவர்களின் உடல்கள் கப்பல் மூலம் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சோ்ந்த ஆரோக்கியஜேசு என்பவரது விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவா் மசியா, வட்டான்வலசையைச் சோ்ந்த நாகராஜ், தாத்தனேந்தல் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மற்றும் மண்டபம் அகதிகள் முகாமைச் சோ்ந்த சாம்சன் டாா்வின் ஆகியோா் மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில் இலங்கை கடற்படையினரில் தாக்குதலில் 4 மீனவா்களும் உயிரிழந்தனா்.
உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இந்திய கடற்படையிடம் மீனவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படுகிறது.
பின்னர் மீனவர்களின் உடல்கள் கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டுவரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.