நகைகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முத்தூட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஒசூரில் முத்தூட் பினான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கியைக் காட்டி அலுவலகத்திலிருந்து மேலாளர் மற்றும் அலுவலர்களை கட்டிப்போட்டு தாக்கி 25 கிலோ தங்கம் மற்றும் ரூ.96 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் இன்று கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒசூரில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தை நோக்கி 2 தனிப்படைகள் சென்றுள்ளன. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என தெரிவித்தார். இந்த நிலையில் நகைகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முத்தூட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கொள்ளை சம்பவத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஒசூர் கிளை விரைவில் மீண்டும் செயல்படும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதில் விளக்கமளித்துள்ளது.