சென்னை: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி விடுதியை மூடும் முடிவினைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக அளவில் கல்விக்கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, 43 நாட்களாக மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் - இன்று திடீரென்று மாலை 4 மணிக்குள் அனைத்து மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது குறித்து நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்தும், அது இந்த ஆட்சியின் காதுகளில் விழவில்லை என்பது வேதனைக்குரியது.
"அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும்" என்ற மாணவர்கள் கோரிக்கை நியாயமானது. அதுகுறித்து முதலமைச்சர் திரு. பழனிசாமி கவலையே படவில்லை. போராடிய மாணவர்களை அழைத்துப் பேசவும் இல்லை. மாணவர்களின் போராட்டத்திற்குத் தீர்வு காண அக்கறை இல்லாத அ.தி.மு.க. அரசு, இப்போது திடீரென்று மாணவ மாணவியரை வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பித்திருப்பது அராஜகமானது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மாணவ மாணவியர் எப்படி திடீரென்று வெளியேறுவார்கள்? அவர்கள் பத்திரமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு யார் பொறுப்பு? எனவே, மாணவிகளின் பாதுகாப்பு கருதி, விடுதியை மூடும் முடிவைக் கைவிட்டு- போராடும் மாணவர்களை அழைத்துப் பேசி அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை மட்டுமே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.