குத்தாலம்: திருவாவடுதுறை ஆதீனத்தில் மகரத்தலை நாள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தொன்மையான சைவ ஆதீனங்களில் ஒன்றாக விளங்குகிறது மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனம். இந்த ஆதீனம், 14-ஆம் நூற்றாண்டில் குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது. குருமுதல்வரான நமசிவாய மூர்த்தியின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதம் 10 நாள்கள் விழாவாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு குருபூஜை விழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இவ்விழா நிகழ்வாக காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மதியம் வேளையில் மாகேஸ்வர பூஜையும், அன்னம்பாளிப்பும், மாலையில் வேதசிவாகம, புராண, சித்தாந்த திருமுறை சிந்தனை விரிவுரைகளும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்வேறு அறிஞர்களுக்குப் பொற்கிழி வழங்கப்பட்டதுடன், பல்வேறு நூல்களும் வெளியிடப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வான குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகளின் குருபூஜை மற்றும் பட்டணப்பிரவேசம், ஆதீன குருமகா சந்நிதானத்தின் சிவஞானக் கொலுக் காட்சி ஆகியன வியாழக்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்பிரமணியன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆர். லலிதா, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர். இந்த விழாவில், மதுரை, தருமபுரம், குன்றங்குடி, துழாவூர், திருப்பனந்தாள், சூரியனார்கோயில், செங்கோல் ஆதீனம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தஆதீன குருமகா சந்நிதானங்களும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய சமஸ்தானங்களும் பங்கேற்கின்றனர்.