ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் வைகை அணையின் உறுதித் தன்மை குறித்து மத்திய நீர்வளக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தொடர் மழை காரணமாக தற்போது 70.27 அடியை எட்டியுள்ளது. அணையில் முழுக் கொள்ளளவான 71 அடி வரை தண்ணீர் தேக்க பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வைகை அணையில் மத்திய நீர்வளத் துறை இயக்குநர் நித்தியானந்த ராய், இணை இயக்குநர் இசாலி ஐசக் ஆகியோர் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.
அணையின் உறுதித் தன்மை குறித்தும், தொடர்ந்து மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகமாகும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற கூடுதல் மதகுகள் அமைக்க வேண்டுமா என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு நடத்தினர். வைகை அணையைப் பொருத்தவரை அதில் உள்ள 14 மதகுகள் வழியாக ஒரே நேரத்தில் 64,000 கன அடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அதிகமாக பெய்து 64 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தால் அணையில் இருந்து அதனை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மூல வைகை ஆறு, வருசநாடு வனப்பகுதி, மேகமலை வனப்பகுதி, பெரியார் ஆறு உள்ளிட்ட பகுதிகளிலும் அக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் குபேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.