சென்னை: தமிழகத்துக்கு இரண்டாவது கட்டமாக மேலும் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, தமிழகத்துக்கு 5, 36,500 கோவிஷீல்டு, 20,000 கோவேக்ஸின் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன் தொடா்ச்சியாக 160 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக தமிழகத்துக்கு 5 லட்சத்து 8,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புதன்கிழமை வந்தடைந்தன. விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட தடுப்பூது தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அதனை சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் உடன் இருந்தாா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு இதுவரை 10.65 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. ஒருவருக்கு இரண்டு தவணைகளாக தடுப்பூசி போட வேண்டும். தற்போது இருப்பில் உள்ளதைக் 5.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க முடியும். தமிழகத்தில் முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படவுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா் 6 லட்சம் பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பலருக்கு தயக்கம் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி பலரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். வரும் 22-ம் தேதி நான் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருக்கிறேன் என்று அவா் தெரிவித்தாா்.