தமிழக உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் உடல் நலம் பெறவேண்டி நீடாமங்கலம் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த தமிழக உணவு அமைச்சர் ஆர்.காமராஜ். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் காமராஜ் பூரண நலம் பெற வேண்டி நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் புதன்கிழமை அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மூலவர் குருபகவான் சன்னதியில் அமைச்சர் காமராஜ் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது. இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் சுதர்சனஹோமம், ஆயுஷ்யஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்யப்பட்டது.
சீதா.லெட்சுமண, அனுமன்சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அமைச்சர் காமராஜ் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் பேரூராட்சிமன்ற முன்னாள் தலைவர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன், நகரசெயலாளர் இ.ஷாஜஹான், எம்.ஜி.ஆர்.மன்றத் தலைவர் பெரியதம்பி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீரையன், முன்னாள் நகர அமைப்பாளர் ராமு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.