அதிமுகவில் வி.கே. சசிகலா இணைய 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக தில்லிக்கு வந்த முதல்வர் பழனிசாமி, திங்கள்கிழமை இரவு மத்திய உள்துறை அûமச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிஷங்கள் நடைபெற்றது.
பின்னர் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "இன்னும் சில தினங்களில் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவர இருக்கும் சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு திரும்பலாம் என்று சொல்லப்படுவது குறித்துக் கேட்கிறீர்கள்; சசிகலா அதிமுகவில் இணைவதற்கு 100 சதவீத வாய்ப்பு இல்லை. சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் ஏற்கெனவே அதிமுகவில் சேர்ந்துவிட்டனர். அவரது முகாமில் ஒரு சிலரே இன்னும் உள்ளனர். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியில் சேர்க்காமல் ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் இறந்த பின்னரே சசிகலா கட்சிக்குள் நுழைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சசிகலா கட்சியில் இல்லை.
அரசியல் பேசவில்லை: தமிழகத்தின் வளர்ச்சி, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்தேன். அவர்களிடம் அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில், தேர்தல் வருவதற்கு காலம் உள்ளது.
மாற்றம் இல்லை: முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் எந்த மாற்றமும் இல்லை.
பாஜகவின் ஆசை இயல்புதான்: தமிழகத்தில் தாமரை மலரும் என்று பாஜக வினர் கூறிவருகிறார்களே' என்று கேட்கிறீர்கள். எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்புதான். தங்கள் கட்சித் தொண்டர்களைத் தேர்தல் நேரத்தில் ஊக்கப்படுத்தக்கூட இவ்வாறு பேசலாம். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.
உயர் கல்வியில் சிறந்த மாநிலம்: நாட்டிலையே தமிழகம்தான் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. எனது ஆட்சியில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 313 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
கரோனா தொற்று காலத்தில் 32 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நான் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்தேன். இதன் மூலம் நோய்த்தொற்று கணிசமாகக் குறைந்தது. அதிக அளவு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
2019- ஆம் ஆண்டு நீர்மேலாண்மைக்கான விருதை தமிழகம் பெற்றது. எனினும் நீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழகம், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஏரிகள், குளம் குட்ûடகள் முறையாக தூர்வாரப்பட்டு குடிமராமத்து பணிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதால் அண்மையில் பெய்த மழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.