திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
காலம் தவறி பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராகி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்கக் கோரியும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு முழு பாதிப்பு என அறிவித்து அறுவடை ஆய்வு செய்வதை கைவிட்டு 100 சதவீத இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் விவசாயம் பாதித்த காரணத்தினால் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரும், கீழையூர் ஒன்றிய கவுன்சிலருமான டி. செல்வம் தலைமையில் அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அக்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் அ.நாகராஜ், விவசாய ஒன்றிய தலைவர் ஏ.செல்லையன்,ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்களான டி.பாலாஜி,பி.எஸ்.டி. பரமசிவம், ஏ.இராமலிங்கம்,ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.சிவதாஸ், விவசாய தொழில் சங்க ஒன்றிய செயலாளர வி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் என 45 பேரை கீழையூர் போலீசார் கைது செய்தனர்.