மேட்டூர் அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகளும், இரண்டாவதுபிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இரண்டாவது பிரிவில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் 285 தொழிலாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக மின் உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வந்தனர். தற்போது அந்த ஒப்பந்தம் வேறு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனால் 285 தொழிலாளர்கள் பணிபுரிய ஜனவரி 15 ஆம் தேதி முதல் அனல்மின் நிலையத்திற்க உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
அனல் மின் நிலைய நிர்வாகமும் ஒப்பந்த நிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு எதிரே புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.
இப்பிரச்னைக்கு மேட்டூர் அனல் மின்நிலைய நிர்வாகம் உடனடியாக தீர்வு காணாவிட்டால் தமிழகத்தில் உள்ள நான்கு அனல் மின்நிலைய தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.