தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோவிட் தடுப்பூசி அந்தந்த அரசு மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது, தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.தமிழகத்திற்கு முதற்கட்டமாக 5 லட்சத்து 36 ஆயிரத்து,500 தடுப்பு மருந்துகள் வந்தது. இந்நிலையில் இன்று(புதன்கிழமை) கூடுதலாக விமானம் மூலம் சென்னைக்கு 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 தடுப்பு மருந்துகள் வந்துள்ளது.
தொடர்ந்து இதுவரை 5 லட்சத்து 32,000 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .மேலும், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடப்படுகிற 166 இடங்கள் தவிர்த்து கூடுதலாக தடுப்பூசி மையங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது . கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சிறிதளவு கூட பாதிப்பு ஏற்படவில்லை .தொடர்ந்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் நம்பிக்கையுடன், தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனர்.
மேலும், சிறிய தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் கூட அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் எந்த வித கட்டணமும் இல்லாமல் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்றார்.