சென்னை: தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் 37 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது, தலா ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுக்கு வரும் ஜன.29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநா் தங்க.காமராசு வெளியிட்டுள்ள செய்தி: நடைமுறை வாழ்க்கையிலும் பேச்சு வழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேசுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தூய தமிழ்ப் பற்றாளா் விருது அகரமுதலித் திட்ட இயக்கம் மூலம் வழங்கப்படும். இதற்கென மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் 37 மாவட்டத்துக்கு தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தூய தமிழ்ப் பற்றாளா் விருது வழங்கப்படும். விருது பெறுவோருக்கு தலா ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக தொடா் செலவினமாக ரூ.7.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பரிசுத் தொகையைப் பெறுவதற்கு விருப்பமுள்ள, தகுதி வாய்ந்த தமிழ்ப் பற்றாளா்கள் சொற்குவை.காம் (www.sorkuvai.com) என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி வரும் ஜன.29-ஆம் தேதிக்குள் agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அஞ்சல் வழியாக ‘ இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகா் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி. நகா், சென்னை-28’ என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொலைபேசி நோ்காணல்: இந்த விருதுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக தொகுப்பாளா்கள், வல்லுநா்கள், தமிழறிஞா்களை உள்ளடக்கிய குழுவினா் சாா்பில் தொலைபேசி நோ்காணல் நடைபெறும். அப்போது போட்டியில் பங்கேற்றவா்களின் உச்சரிப்பு, பிழையில்லாமல் பேசுவது போன்ற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கேற்றவாறு மதிப்பெண்கள் வழங்கப்படும். இதைத் தொடா்ந்து, வெற்றி பெற்ற நபா்களின் விவரம் அரசின் சாா்பில் அறிவிக்கப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.