சென்னை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பொதுத் தேர்வெழுதும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பள்ளிக்கு வருகை தந்தனர்.
முன்னதாக, பள்ளிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
காலையில் பள்ளிகள் திறந்தபோது, மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். முகக்கவசம் அணிவது குறித்து உறுதி செய்த பின்பே மாணவிகளும் ஆசிரியர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்தபடி வந்த மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது.
மேலும் ஒரு வகுப்புக்கு 25 பேர் வீதம் 30-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
பின்னர் நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாடம் கற்க ஆவலுடன் இருப்பதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
வகுப்புகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன.