தமிழகத்தில் கரோனா தொற்று நோயின் காரணமாக கடந்த 10 மாதங்களாக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அரசு வழிகாட்டுதலின்படி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிகளுக்கு வரலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 385 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாணவிகள் கரோனா விதிகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் அமர வேண்டும், தனியாக குடிநீர், உணவு எடுத்து வந்து பருக வேண்டும். பாட வேலைகளை நன்கு கவனித்து படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலை 8 மணி முதல் மாணவர்கள் வருகை தொடங்கியது. காலை ஒன்பது முப்பது மணிக்கு பள்ளிகள் தொடங்கின. மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்ட தெர்மல் மீட்டர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறிந்து பின்னர் கைகளை சுத்தப்படுத்துவதற்கு சானிடரி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் மாணவ மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கினர்.
முதல் நாளில் 90% மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்திருதனர். முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளை மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.