புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை, தமிழக மாநிலத்துக்குத் தேவையான திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன். அரசியல் பேச தற்போது தகுந்த நேரம் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
எனது கோரிக்கையை ஏற்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்களை அளித்துள்ளேன். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு, கல்லணை சீரமைப்புத் திட்டங்களை துவக்கி வைக்க தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடியும் தமிழகம் வருகை தர ஒப்புக் கொண்டுள்ளார்.
புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க போதிய நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். நல்ல சாலைகளை அமைத்துக் கொடுத்திருப்பதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளன.
சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை என்று பதிலளித்த முதல்வர் பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.