இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் துணை இயக்குநர் பிரதீப் கௌர் இன்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி போடும் பணி 4 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவமனையின் இயக்குநர்கள், சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று கரோனா தடுப்பூசி போட்ட்டுக்கொண்ட நிலையில் இன்று மருத்துவ நிபுணரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் துணை இயக்குநருமான பிரதீப் கௌர் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா தடுப்பூசித் திட்டத்தில் பங்குபெற்றதை பெருமையாகக் கருதுகிறேன். கரோனா தடுப்பூசியைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், உற்பத்தியாளர்கள், சோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.