வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு துவங்கியது. அதிகாலை முதல் 100 சதவீதம் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் உள்ளது. வானம் பார்த்த பூமியான இப்பகுதிக்கு மிகச்சிறந்த குடிநீர் ஆதாரமாகவும், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கம்பு, சோளம் போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யவும், காய்கறிகள் சாகுபடிக்கும் இந்த வாய்க்கால் பாசனம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
காங்கயம் - வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் அரசு விதிமுறைப்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு 2 சுற்று தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 3 நாள் மட்டுமே திறந்து, 28 நாள்கள் அடைக்கப்படுகிறது.
பொதுப்பணித்துறைக்குத் தெரிந்தே வாய்க்காலில் நடக்கும் தண்ணீர் திருட்டைத் தடுத்து, தங்களுக்கு முறைப்படி தண்ணீர் திறக்க வேண்டுமென பல மாதங்களாக அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தியும் கண்டு கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள், சமூக நல அமைப்புகள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதே போல காங்கயத்திலும் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
காங்கயம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதையும் கடந்து, தனியாருக்குச் சொந்தமான இடத்தில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.