அம்பாசமுத்திரம் : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய நான்கு தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்காக மாஞ்சோலையில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கரானா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. மீண்டும் இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த 17ஆம் தேதி முதல் மாஞ்சோலை உயர்நிலைப்பள்ளி பகுதியில் சில காட்டு யானைகள் நடமாடி வருவதால், பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்திற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து யானைகள் அதே இடத்தில் முகாமிட்டு உள்ளதால் மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பிற ஊர்களில் இருந்து இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாஞ்சோலை செல்ல வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் ஆசிரியர்களும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பத்து மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறையினர் மாஞ்சோலை அரசுப் பள்ளி அருகில் நடமாடிவரும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையும் வனத்துறை அனுமதி மறுப்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.