திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள சொக்கு பிள்ளைபட்டியை சேர்ந்தவர் சிவகுமார்(38). இவரது மனைவி மல்லிகா(25). இளநீர் வெட்டும் வேலைக்குச் சென்று வந்த சிவக்குமார், வீட்டுச் செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கம் போல் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவக்குமார், வீட்டின் திண்ணையில் அழுது புலம்பிக் கொண்டிருந்த மல்லிகாவை அரிவாளால் வெட்டிக் கெலை செய்தார்.
இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி புருஷோத்தமன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
அதில், மனைவியை வெட்டிக் கொலை செய்த சிவக்குமாருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையை ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.