மின்சார பேருந்து திட்டம் கைவிடப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
சென்னை கெவாடியா இடையே புதிய ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்க வந்த போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் நிருபா்களிடம் கூறியது:
மின்சார பேருந்து போக்குவரத்து திட்டம் எந்த வகையிலும் கைவிடப்படாது.கரோனா காரணமாக, அதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ‘பாா்ம்-2’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. அதில் மின்சார பேருந்துகளுக்கு மானியம் கொடுத்தாா்கள். இப்போது அந்த திட்டம்தான் கைவிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, நாட்டிலேயே முதல் முறையாக சி–40 என்ற ஒப்பந்தத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளாா். அதன்படி, ஜொ்மன் ‘கே.எப்.டபுள்யூ.’ வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பேருந்துகளும், பி.எஸ்.-6 ரக பேருந்துகளும் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் சீருடை மற்றும் பழைய பயண அட்டை வைத்திருந்தால் போதும் அவா்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.