தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியைத் தோற்கடித்திட முழுமூச்சில் பணியாற்றுவோம் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் மு.நிஜாம்முகைதீன் குடவாசலில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான கட்சிநிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் சந்திக்கும் நிகழ்ச்சி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக திங்கள்கிழமைக் குடவாசல் அருகே உள்ள அதங்குடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் மு.நிஜாம்முகைதீன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது,
தமிழகத்தில் தற்போது எஸ்டிபிஐ கட்சியின் கட்டமைப்புகள் 200க்கும் மேற்பட்டத் தொகுதிகளில் அமைக்கப்பட்டு கட்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி அல்லாத கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெறும். மேலும் மதநல்லிணக்கத்தைப் பாதுகாத்திடாமலும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையிலும், இந்தியத் தேசிய நலனுக்கு எதிராகவும் செயல்படும் பிஜேபி கட்சியினைத் தோற்கடிப்பதில் எஸ்டிபிஐ கட்சி முழுமூச்சாகச் செயல்படும். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி அங்கம் வகிப்பது, திமுக அணியா, மூன்றாவது அணியா, தனித்தா என்பது பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். மேலும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் சிதறி, எக்காரணத்தைக் கொண்டும் பிஜேபி வெற்றி பெறக்கூடாது என்பதில் முழு மூச்சாக கவனம் செலுத்தி,உறுதியுடன் போராடுவோம் எனத் தெரிவித்தார்.
முன்னதாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள அடவங்குடியில், எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சி கிளைத் தலைவர் கமருதீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக நகரத் தலைவர் முபாரக் தலைமையில் கட்சி கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.நிஜாம்முகைதீன், மாநிலச் செயலாளர் அபூபக்கர் சித்தீக், மாவட்டத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்டச் பொதுச்செயலாளர் விலாயத் உசேன், மாவட்டத் துணைத்தலைவர் மாஸ் அப்துல் அஜீஸ் பைஜி உள்ளிட்ட நிர்வாகிகளும், குடவாசல், கூத்தாநல்லூர், அடவங்குடி, அத்திக்கடை, பாலாகுடி உள்ளிட்ட ஊர் கட்சி நிர்வாகிகளும், ஜமாத்தார்களும் கலந்துகொண்டனர்.