பள்ளி மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்க பள்ளிச் சீருடை அணிந்து, பழைய பேருந்து பாஸ் வைத்திருந்தால் போதுமானது என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்துப் பயணம் குறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், முதல் கட்டமாக பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பேருந்துப் பயணச் சலுகை அட்டையை பயன்படுத்தி பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.