கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே உடுமலையில் இருந்து கோவை வந்த வேன், கேரளம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மீது மோதிய விபத்தில் வேனில் வந்த மூதாட்டி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கோவை, மதுக்கரை சீரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (62). கோவை வேளாண் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். மனைவி ராஜாமணி (60). இவர்களது மகளின் குழந்தைகளான கிஷோர் (17), ரித்தீஷ் (7), ஆகிய நான்கு பேரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு பொங்கல் விழாவிற்குச் சென்றுள்ளனர். பின் மீண்டும் இன்று அதிகாலையில் வாடகை வேனில் கோவை நோக்கி வந்துள்ளனர்.
அப்போது ஈச்சனாரி புறவழிச்சாலை சந்திப்பில் வேன் வந்த போது, நாகூரில் இருந்து பயணிகளுடன் அதிவேகமாக கோழிக்கோடு நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து வேன் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் வேனில் வந்த பழனியைச் சேர்ந்த ஓட்டுநர் முகமது ஆசிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதில் வந்த நடராஜன், ராஜாமணி, கிஷோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு சுந்தராபுரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.
ராஜாமணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மதுக்கரை காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.