திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில் அண்மையில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடந்த 10 நாள்களாக பெய்த தொடர் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீடு செய்துள்ள அனைத்து நெல் பயிர்களுக்கும் 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எனக் கோரிக்கையை வலியுறுத்தி கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலர் எல்.சண்முகவேல் தலைமை வகித்தார்.
இதில். கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.தங்கராஜ் , கே. கோவிந்தன் , கே. தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 25 சிபிஎம் கட்சியினரை கோட்டூர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.