விழுப்புரம் மாவட்டத்தில் தைப் பொங்கல் விழாவின் நிறைவாக ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணையாறு பேரங்கியூர், தென்பெண்ணையாறு அத்தியூர் திருவாதி, கோலியனூர் அருகே கள்ளிப்பட்டு கண்டரக்கோட்டை, சொர்ணாவூர், தென்பெண்ணையாறு, திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆறு, உளுந்தூர்பேட்டையில் கெடிலம் ஆறு, திண்டிவனம் அருகே சங்கராபரணி ஆறுகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
ஆற்றுத் திருவிழா தினங்களில் அனைத்து கிராமங்களிலிருந்தும் கோயில் உற்சவ தீர்த்தவாரி வருவதும், பொதுமக்கள் வந்து நீராடி வணங்கிச் செல்வது, ஆற்றில் குளித்து மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம்.
காய்கறி, பழங்கள், கரும்பு, விளையாட்டுப் பொருள்கள் என சந்தைகளும் கூடி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.
நிகழாண்டும் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஆற்றுத் திருவிழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக நிகழாண்டு ஆடித்திருவிழாவுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால், திங்கள்கிழமை ஆற்றுத் திருவிழாவிற்கு ஆறுகளில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
விழுப்புரம் அருகே பேரங்கியூர், அத்தியூர் திருவாதி ஆகிய பகுதிகள் திருவிழாவிற்கு சந்தைகள், கடைகள், பொது மக்கள் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. காவல்துறையினர் முன்கூட்டியே குவிக்கப்பட்டு பொதுமக்கள் வரத்தைத் தடுத்தனர். இதனால் இந்தாண்டு ஆற்றுத் திருவிழா கொண்டாட்டம் இன்றி பொதுமக்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.